பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி நடந்த குழந்தைகள் மாரத்தான் : ஊட்டியில் மாணவன் மயங்கி சம்பவத்தால் பரபரப்பு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று குழந்தைகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி, எந்தவிதமான அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இன்று காலை 10 மணியளவில், கடும் வெயில் நிலவிய நேரத்தில் குழந்தைகள் ஓடச் செய்யப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, மருத்துவ குழுவும் இல்லை என்ற நிலை காணப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, போட்டியின் போது காபி ஹவுஸ் சதுக்கம் பகுதியில் ஒரு மாணவன் திடீரென மயங்கி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
அப்போது அங்கு உடனடி மருத்துவ உதவி செய்ய எந்த ஏற்பாடும் இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
கடும் வெயில் சூழலில், சிறுவர்கள் பங்கேற்கும் போட்டியை காலை 10 மணிக்கு நடத்த யார் அனுமதி வழங்கினர் என்பது தெரியவில்லை என்றும், இவ்வாறான அலட்சியமான ஏற்பாடுகள் குழந்தைகளின் உடல்நலத்துக்கு பெரும் ஆபத்தாக மாறும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
“குழந்தைகள் பங்கேற்கும் எந்தவொரு விளையாட்டு போட்டியாக இருந்தாலும், கட்டாயமாக ஆம்புலன்ஸ், மருத்துவ உதவியாளர்கள், குடிநீர் வசதி, நிழல் ஏற்பாடுகள் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இருக்க வேண்டும். ஆனால் இங்கு ஒன்றுமே இல்லை” என நிகழ்வைக் கண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி, சிறுவர்களை வெயிலில் ஓடச் செய்வது முறையல்ல. இது போன்ற போட்டிகளை இனி அனுமதிக்கக் கூடாது என பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment