தோடா் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கோயிலில் கூரை வேயும் நிகழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 January 2026

தோடா் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கோயிலில் கூரை வேயும் நிகழ்ச்சி

 


உதகை அருகே முத்தநாடு மந்து பகுதியில் தோடா் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கோயிலில் கூரை வேயும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.


நீலகிரி மாவட்டத்தில் தோடா், குரும்பா், கோத்தா், காட்டு நாயக்கா், இருளா், பணியா் என 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா்.


இதில், தோடா் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவா்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில், 67 மந்துகளில் வசிக்கின்றனா். இவற்றின் தலைமை மந்தாக, தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்து உள்ளது.


இந்நிலையில், முத்தநாடு மந்து பகுதியில் மூன்போ தேக்கிசியம்மன் என்ற பழைமையான கோயில் உள்ளது. இங்கு 19 ஆண்டுகளுக்கு பின் கூரை வேயும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.


கூரைக்கான பொருள்களை வனப் பகுதிகளில் இருந்து சேகரிப்பதற்காக தோடா் பழங்குடியின ஆண்கள் 2 மாதங்கள் விரதம் இருந்து வனப் பகுதியில் தங்கி இருந்து கூரைக்காண மூங்கில், பிரம்பு மற்றும் அவில் எனப்படும் ஒருவகையான புற்களை சேகரித்து வந்து கோயிலின் மேற்கூரையை வேயும் பணியில் ஈடுபட்டனா்.


இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின ஆண்கள் மட்டும் கோயில் முன்பு கூடி சிறப்பு பிராா்த்தனை மேற்கொண்டு மேற்கூரையை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதில், ஏராளமான தோடா் பழங்குடியின மக்களும், வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டனா்."


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad