கோத்தகிரியில் காலநிலை மாற்றம் கருத்தரங்கு மற்றும் மரம் நடும் விழா.
கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆசிரிய பயிற்சி நிறுவனத்தில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் திரு. சேகரன் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் திரு. கே. ஜே .ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கூறிய கருத்துக்கள்.....
பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபொருள் எரிபொருட்களை கடந்த 150 ஆண்டுகளில் மிக அதிக அளவில் பயன்படுத்தியதன் விளைவாகவும் பசுமை குடில் வாயுக்களான கார்பன் டை ஆக்சைடு மீத்தேன் நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை மிக அதிக அளவில் வெளிப்படுத்தியதன் காரணமாகவும் பூமியின் வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது. பூமியின் தாங்கும் திறனை விட மிக அதிக அளவில் இந்த பசுமை குடில் வாயுக்கள் அதிகரித்ததன் விளைவாக புவி வெப்பம் ஒரு டிகிரிக்கு மேல் அதிகரித்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் பூமியின் வெப்பம் 1.41 டிகிரி சென்டி கிரேடுக்கு மேல் அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது . 1.5 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் பூமியின் வெப்பநிலை உயர்ந்தால் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை நாம் கடுமையாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். கடந்த ஆண்டில் இதே செப்டம்பர் மாதத்தில் பூமியின் சராசரி வெப்பநிலை 1.64 டிகிரி வரை பதிவு செய்யப்பட்டது. இது போன்ற மேலும் பல தரவுகளை பார்க்கும் பொழுது காலநிலை மாற்றத்தின் தீவிரம் நம்மால் காண முடிகிறது. வட இந்தியாவில் உத்தரகாண்ட், காஷ்மீர்,, மும்பை போன்ற பல நகரங்களில் மழை, வெள்ளம் மற்றும் பேரிடர் ஏற்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். அதேபோல பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானத்திலும் மக்கள் வெள்ள அபாயத்தில் சிக்கி தவிப்பது காலநிலை மாற்றத்தின் ஒரு தாக்கம் ஆகும். மழையே பெய்யாத ராஜஸ்தான் பாலைவனத்திலும் கூட பேய் மழை பெய்து வெள்ளக்காடாக இருப்பது காலநிலை மாற்றத்தின் ஒரு துவக்கமே ஆகும். 2050-க்குள் புவியின் வெப்பநிலை இரண்டு டிகிரி சென்டி கிரேட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வெப்பநிலையில் அரிசி கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். அண்மையில் கடல் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருவதாகவும் அதன் விளைவாக கடற்கரையோர நகரங்கள் குறைந்தபட்சம் 10 கிலோமீட்டர் தூரம் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறித்து ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற்று கவலை கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இதனைக் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு கல்வித்துறை அனைத்து பள்ளிகளிலும் மரம் நட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார். பின்னர் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விரிவுரையாளர்கள் அமுதா, சந்திர காந்தி மலர்கொடி, ஆசிரியர்கள் விஜயகுமார் ரமேஷ் ஹெப்சிபா பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் திரு. சரவணகுமார் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை ரூபி பரிமளா நன்றி உரை வழங்கினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment