தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும்
திட்டத்தின் துவக்க விழா கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது பாதுஷா தலைமை தாங்கினார். தொழிலதிபர் போஜராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோத்தகிரி அரிமா சங்கத்தின் தலைவர் ராமச்சந்திர ரெட்டி, மரியன்னை பள்ளியின் தாளாளர் அருட் சகோதரி லூர்து, பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதிரி அல்போன்சா, சிபிஆர் சுற்றுச்சூழல் மையத்தின் கள இயக்குனர்குமாரவேல், நெஸ்ட் அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர் ராமதாஸ், தேசிய பசுமை படை திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ், ஹோப் ஆப் கார்டன் அறக்கட்டளையின் நிர்வாக செயலர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன், ஹெரிடேஜ் அறக்கட்டளையின் செயலர் கண்ணன் ராமையா, தொழிலதிபர் தாஜுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த கருத்தரங்கின் போது புவி வெப்பம், காலநிலை மாற்றம் ஆகியவற்றின் தாக்கம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
புவி வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தின் பிடியிலிருந்து பூமியை காக்க நமக்குள்ள ஒரே வழி மரங்கள் நடுவது தான். இந்த ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் திட்ட இயக்குனர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கே .ஜே .ராஜு அவர்கள் கூறியதாவது.....
இந்த ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மரக்கன்று வழங்கப்படும். குறைந்தபட்சம் ஒரு லட்சம் மக்களை ஏதாவது ஒரு மரம் நட வைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி மாணவரும் ஒரு மரக்கன்று நட்டு அதனை தன் பெற்றோர் பெயரிட்டு அழைத்தால் அவருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறப்பாக பராமரிக்கும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும் என்பன போன்ற பல திட்டங்களை விளக்கினார். முன்னதாக அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவரும் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான அரிமா மோகன்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தேசிய பசுமைப்படை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை எமல்டா ஜோன் ரூபா நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment