நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது, பாக்கனா கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதி மக்கள் மட்டும் இன்றி இதனை ஒட்டிய ராக்வுட், புத்தூர்வயல், ஓர்கடவு உள்ளிட்ட பகுதி மக்கள், தங்களின் மருத்துவ தேவைக்காக நெலாக்கோட்டை அல்லது உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது பந்தலூர் அரசு மருத்துவமனையை நாட வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்தப் பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வந்து செல்லும் நிலையில், போதிய அரசு பஸ் வசதிகளும் இல்லாததால், இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு மருத்துவமனைகளை நாடுவது என்பது இயலாத காரியமாக உள்ளது.இதனால் தங்கள் கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் மருத்துவமனை கட்டுவதற்கு இடம் இல்லாத நிலையில், இதற்கு சாத்தியம் இல்லை என அரசுத்துறை அதிகாரிகள் கை விரித்தனர்.
இதனால் கிராம மக்கள் ஒன்றிணைந்து, கிராம வளர்ச்சி குழு என்ற அமைப்பை உருவாக்கி பொதுமக்கள் அனைவரும் இணைந்து, கிராமத்தின் மத்தியில் அரசு மருத்துவமனை கட்டுவதற்கு 17 சென்ட் நிலத்தை 8.65 லட்சம் மதிப்பீட்டில் வாங்கி உள்ளனர்.
இடத்திற்கான ஆவணங்கள் மற்றும் கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்டுவதற்கான கோரிக்கை மனுக்கள் அடங்கிய ஆவணங்களை மாவட்ட கலெக்டரிடம் , வளர்ச்சி குழு தலைவர் கவுன்சிலர் அன்வர்ஷாஜி, செயலாளர் வக்கீல் சவுக்கத் அலி, ஒருங்கிணைப்பாளர் அன்வர்அப்துல்லா, நிர்வாகிகள் ஷேக்அப்துல்லா, உம்மர் உள்ளிட்டோர் வழங்கினார்கள். அரசு மருத்துவமனை கட்டுவதற்கு நிலத்தை வாங்கி அரசிடம் ஒப்படைத்த கிராம மக்களை அதிகாரிகள் பாராட்டினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment