நீலகிரி மாவட்டம் எல்க்ஹில் பகுதியை சேர்ந்தவர் மோகன்(46). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷோபா(38) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகள் ஊட்டியில் உள்ள தனியார் கல்லூரியிலும், மகன் அந்த பகுதியில் உள்ள பள்ளியிலும் படித்து வருகின்றனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக தம்பதியிடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் எல்க்ஹில் பகுதியில் உள்ள மோகனுக்கு சொந்தமான வீட்டில் ஷோபா தனது குழந்தைகள் மற்றும் கணவரின் சகோதரி, தாயாருடன் வசித்து வந்துள்ளார். மோகன் மட்டும் முத்தோரை பகுதியில் வசித்து வந்தார். ஷோபா ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே சமாதானம் ஏற்பட்ட நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மோகன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் எல்க்ஹில் வீட்டில் சேர்ந்து வசித்து வந்த மோகனின் சகோதரியை, அவர் திருமணமான வீட்டுக்கு சென்று வாழுமாறும், இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்றும் ஷோபா கூறியதாக தெரிகிறது. இதனால் இன்று மாலை 7.30 மணியளவில் மீண்டும் மோகன் மற்றும் ஷோபா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மோகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஷோபாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் ஷோபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மோகன் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஷோபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரணடைந்த மோகன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் கணவர், மனைவியை கொலை செய்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment