போக்குவரத்து காவல் நிலம் ஆக்கிரமிப்பு :
கோத்தகிரி போக்குவரத்து காவல் நிலையத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியார் கட்டிடடத்தை 30 நாட்களுக்குள் இடித்து அகற்ற உத்தரவு பிறப்பித்த தாசில்தார் உத்தரவு நகலை கட்டிட முகப்பில் வருவாய்துறையினர் ஒட்டினர்.
கோத்தகிரி பஸ் நிலையம் அருகே போக்குவரத்து காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் கோத்தகிரி கிராம நிர்வாக அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய வளாகத்தின் ஒரு பகுதியில் விபத்து வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெகு அருகாமையில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் மதுபான பார் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் ஒருபகுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை காவல் நிலையத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ளது. பல வருடங்களாக இந்த நிலத்தை அதிகாரிகள் நில அளவை செய்யாமல் உள்ளனர். எனவே உடனடியாக நில அளவை செய்து அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பின் அந்த நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த செய்தி மார்ச் மாதம் 'தினத்தந்தி ' நாளிதழில் வெளியாகி இருந்தது. இதன் எதிரொலியாக மார்ச் மாதம் 24 ம் தேதி கோத்தகிரி தாசில்தார் அலுவலக நில அளவையர்கள் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு சொந்தமான நிலத்தை ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தின் மூலம் துல்லியமாக நில அளவை செய்தனர். இதில் காவல்துறைக்கு சொந்தமான சுமார் 3 சென்ட் நிலம் தனியாரால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது உறுதியானது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியாருக்கு வருவாய்த் துறையினர் ஏப்ரல் 28 ம் தேதி நோட்டீஸ் வழங்கினர். அதில் காவல்துறைக்கு சொந்தமான நிலம் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள், தங்களது நிலம் சம்பந்தமான ஆவணங்களுடன் தாசில்தார் அலுவலகத்தை அணுகி, தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சம்பந்தபட்ட தனியார் அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து ஒரு மாத காலத்திற்குள் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் ஆக்ரமிப்பு நிலத்தில் உள்ள கட்டிடத்தை தாங்களாகவே இடித்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு இடிக்கத் தவறினால் ஒரு மாதத்திற்கு பின் ஆக்கிரமிப்பு கட்டிடம் அரசின் சார்பில் இடித்து நிலம் பறிமுதல் செய்யப்படும் என கோத்தகிரி தாசில்தார் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவு நோட்டீசை நேற்று மதியம் கோத்தகிரி கிராம நிர்வாக அலுவலர் கமல் மற்றும் கிராம உதவியர் ஆகியோர் சம்பந்தபட்ட கட்டிடத்தில் இயங்கி வரும் தனியார் பார் மேலாளரிடம் அளிக்கச் சென்றனர். ஆனால் அவர் அந்த நோட்டீசை வாங்க மறுத்து தபால் மூலம் அனுப்புங்கள் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்கள் அந்த கட்டிடத்தில் முகப்பு பகுதியில் அனைவருக்கும் தெரியும் வகையில் அந்த நோட்டீசை ஒட்டி விட்டு சென்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment