நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பொன் வயல் பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு விவசாய நிலத்துக்குள் சிறுத்தை புலி நுழைந்து படுத்து கிடந்தது. இதைக் கண்ட பகுதியை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
மேலும் பொது மக்களைக் கண்ட சிறுத்தை புலி எழுந்து நடக்க முடியாமல் மெதுவாக சென்றது. அது பலத்த காயம் அடைந்திருப்பது தெரிய வந்தது. இதனால் வனத்துறையினர் விரைந்து வந்து சிறுத்தை புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சிறுத்தை புலி தேவன் 2 பகுதியில் நுழைந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கவச உடைகள் அணிந்த வனத்துறையினர் தேயிலை செடிகளுக்கு அடியில் சிறுத்தை புலி படுத்து கிடக்கிறதா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி இன்று காலை 9 மணிக்கு சிறுத்தை புலி படுத்து கிடந்த இடத்தை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். ஆனால் மயக்க ஊசி செலுத்துவதற்கு டாக்டர் இல்லை. இதைத் தொடர்ந்து முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டார்.
ஆனால் சிறுத்தை புலி அங்கிருந்து தப்பியது. இதைத் தொடர்ந்து கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் வனத்துறையினர் தேடுதல் வேட்டை மீண்டும் தொடங்கியுள்ளனர். சிறுத்தை புலியை கண்டவுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே இரண்டு இடங்களில் இரும்பு கூண்டுகளும், பல இடங்களில் கேமராக்களையும் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment