கூடலூர் ஊராட்சி ஒன்றியம், நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பொன்னானி பஜார் பகுதியில் இருந்து அம்பலபாடி புளியாடி, மானிகுண்ணு வழியாக மாங்காம்வயல் செல்லும் சாலை உள்ளது. இதனை சுமார் 10க்கும் மேற்கண்ட கிராம மக்கள் தங்களின் விவசாய பொருட்களை கொண்டு வரவும், ரேசன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொண்டு செல்லவும், கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பல தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் தினசரி ஏராளமான ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் தனியார் பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இந்த சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் தார் சாலையாக சீரமைத்து தார் போடப்பட்டது. அதன் பின்னர் எந்த பணியும் செய்யாமல் உள்ளதால் தற்போது இந்த சாலை ஆங்காங்கே உடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது மழை பெய்துள்ளதால் குழிகளில் தண்ணீர் தேங்கி சிறு சிறு குட்டைகள் போல் காட்சியளிக்கின்றது.
இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட வந்து செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இதனால் இந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர் இந்த சாலையை சீரமைக்க கூடலூர் ஊராட்சி ஒன்றியம் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் சீரமைத்து தரவேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment