வனப்பகுதி கிராமத்தில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி டி.எஸ்.பி. மகேஷ்குமார் பங்கேற்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 October 2022

வனப்பகுதி கிராமத்தில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி டி.எஸ்.பி. மகேஷ்குமார் பங்கேற்பு.

நீலகிரி மாவட்டம் கூடலூர், ஓவேலி அருகே உள்ள வனப்பகுதியில் அமைந்திருக்கும் நாயக்கன்பாடி  கிராமத்தில் கூடலூர் நகைச்சுவையாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி  டி.எஸ்.பி. மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. எல்லமலை வனப்பகுதிக்குள் அமைந்திருக்கும் நாயக்கன்பாடி கிராமத்தினை கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்ட   மாவட்ட எஸ்.பி.யாக இருந்த  சசிமோகன் அவர்கள் கூடலூர் நகைச்சுவையாளர் மன்றத்திற்கு தத்து கொடுத்து கிராமத்தினை வளர்ச்சி அடைந்த கிராமமாக மாற்றுவதற்கு வழிவகை செய்தார்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளின் கல்வியை உறுதிப்படுத்துதல் மற்றும் அனைத்து வகையிலும் முன்னேறிய கிராமமாக மாற்றுவதற்கு நகைச்சுவையாளர் மன்றமும் , காவல்துறையினரும் இணைந்து சிறப்பாக செயலாற்றி வருகின்றனர்.


அப்பகுதியில் கிடைக்கும் தேன், குறுமிளகு, காபி, உள்ளிட்ட பொருட்களை நகைச்சுவையாளர் மன்றத்தின் மூலமே உரிய விலைக்கு விற்பனை செய்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகின்றனர். முதல்முறையாக அப்பகுதியில் உள்ள பழங்குடியின மாணவி ஒருவரை 12ஆம் வகுப்பு படிக்க வைத்து தற்பொழுது அனைத்து வசதிகளுடன் கல்லூரியில் சேர்த்து அவருடைய முழு கல்விச்செலவையும்  கூடலூர் நகைச்சுவையாளர் மன்றமே ஏற்றுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களோடு கூடலூர் டி.எஸ்.பி. மகேஷ் குமார் கலந்துகொண்டு அப்பகுதி மக்களிடையே பேசும்போது, இவ்வளவு அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்திருக்கும் கிராமத்தை ஒரு மன்றம் தத்தெடுத்து மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்தி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு செயலாற்றி வருவதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், இதனை பயன்படுத்தி இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களுடைய அனைத்து குழந்தைகளையும் நல்ல முறையில் படிக்க வைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் தாங்களும் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று தெரிவித்தார்.


மேலும் பழங்குடியின கிராமத்தில் முதல் மாணவியாக கல்லூரிக்கு சேர்ந்த கீதா என்ற மாணவியின் பெற்றோர்களுக்கு சாவை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் போதைப் பொருட்கள் மற்றும் குடிப்பழக்கத்தில் இருந்து அப்பகுதி மக்கள் விடுபட்டுள்ளதையும் பாராட்டி, தொடர்ந்து அனைத்து வகையிலும் கிராம முன்னேற்றத்திற்கு துணை நிற்பதாகவும் உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து கொண்ட டிஎஸ்பி மகேஷ் குமார், நகைச்சுவையாளர் மன்றத்தின் தலைவர் ஓய்வு பெற்ற தாசில்தார்  ஜான் மனோகர் ராஜ், செயலாளர் அருண்குமார், பொருளாளர் மணிகண்டன், ஓவேலி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசன், சிறப்பு காவல் பிரிவை சேர்ந்த தலைமை காவலர் மோகன்தாஸ், தலைமை காவலர் கஜேந்திரன் உள்ளிட்டோர் இணைந்து அப்பகுதி மக்களுக்கு தீபாவளிக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் இனிப்பு, காரம்  வழங்கி அவர்களோடு பட்டாசு வெடித்தும் மத்தாப்புகள் கொளுத்தியும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடினர்.


இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடுவதாகவும், நகைச்சுவையாளர் மன்றத்தின் பணிகளால் தங்கள் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் முழுமையாக முன்னேறிய கிராமமாக எங்களுடைய கிராமம் மாறும் என்றும் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad